Tuesday, February 24, 2009

கோடம்பாக்கம் ஸ்kool - Old Wine in a New Bottle

தமிழ் சேனல்களை பொறுத்தவரை புது விதமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டிவி எப்போதுமே நம்பர் ஒன். ஜோடி நம்பர் ஒன், காபி வித் அணு, நீயா நானா, பாடும் ஆபீஸ், கலக்கப் போவது யாரு என்று பல நிகழ்ச்சிகளை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம். எத்தனையோ புதிய நிகழ்ச்சிகள் வந்திருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்னாள் ஒளிபரப்பான யூகி சேதுவின் நையாண்டி தர்பார் இன்றைக்கும் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இது போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியை நமக்கு அடையாளம் காட்டுவதே மற்ற டிவிக்களில் (காப்பியடிக்கப்பட்டு) வரும் இதே போன்ற நிகழ்ச்சிகள்தான். இந்த வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது கோடம்பாக்கம் ஸ்kool. மேடைகளில் மிம்மிக்கிரி செய்யும் கலைஞர்கள் அதிகம் பயன்படுத்திய கான்செப்ட் தான் கதை. ஒரு காலேஜ்ல ரஜினி, கமல், விஜயகாந்த் எல்லாம் படிக்கிறாங்க என்று பல குரல்களில் பேசிக்காட்டுவார்கள், இங்கு அதையே நாடகமாக ஆக்கியிருக்கிறார்கள். வகுப்பின் ஆசிரியராக சுவாமிநாதனும், மாணவர்களாக ராசுக்குட்டி, சின்ன கவுண்டர், மமீதா, ஆண்ட்ரியா, வீராசாமி, சவுண்டு மணி, பில்லா, Prestige பத்மநாபன் மற்றும் பலர். எல்லோருமே கலக்கலாக இமிடேட் செய்தாலும் ஹய்-லைட் பில்லாவாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தான். அஜித் ஸ்டைலில் அவர் பேசுவதும் பின்னணி இசையில் பில்லா தீம் மியூசிக் வருவதும் பெர்பெக்ட் காமெடி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியே மொக்கை வசனங்கள்தான். சும்மா சொல்லக்கூடாது அந்தக்கால "Prestige"பத்மநாபனில் இருந்து இந்தகால மமிதா வரை அனைவரும் ஒரேமாதிரி மொக்கை போடுகிறார்கள். கூடிய சீக்கிரம் கோலிவூட் காலேஜ், ஜாலி கிளாஸ் என்ற பெயரில் மற்ற சேனல்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

Monday, February 23, 2009

விபூதி

படத்துல இருக்குறது என்னன்னு தெரியுதா? விபூதி (திருநீறு) தான் அது. சுமார் 40 வருசத்துக்கு முன்னால, எங்க ஐயா (அம்மாவோட அப்பா) எங்க மாமாவுக்கு கொஞ்சம் விப்பூதி கொடுத்தாராம். அதை அவர் பத்திரமா வச்சிருந்து 6 வருஷம் முன்னால எங்க அண்ணன் கப்பல் வேலைக்குப் போகும்போது, மடலில் இருந்து கொஞ்சம் விபூதி எடுத்து அதோடு இந்த விப்பூதி கொஞ்சம் கலந்து "தைரியமா போயிட்டு வாங்க, எப்பவாவது பயமா இருந்தா இந்த விபூதிய எடுத்து பூசிக்குங்க, அய்யா கொடுத்தது" என்று சொல்லி கொடுத்தாராம். ஒரு இரண்டு வருஷம் முன்னாடி நான் வேலைக்காக முதன் முதலாக மும்பை போனபோது எங்க அண்ணன் இந்த விபூதியில் இருந்து கொஞ்சம் எடுத்து அதோடு வீட்டில் சாமி முன்பு இருந்த விபூதி கொஞ்சம் கலந்து ஒரு பேப்பரில் மடித்து "அய்யா கொடுத்த விபூதியாம் இது, நான் வேலைக்கு போறப்ப மாமா கொடுத்தாங்க, அதுல கொஞ்சத்த இதுல வச்சுருக்கேன், வேனுங்குறப்ப எடுத்து பூசிக்க" என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். எங்க அய்யாவையே இதுவரை பார்த்திராத எனக்கு, கையில் உள்ள திருநீறில் ஒரு சில துகள்கள் அவர் கைபட்டது என்று நினைக்கும் போதும், பூசிக்கொள்ளும் போதும் ஏதோ அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய உணர்வு வரும்.
சில நேரங்களில் சமய அடையாளங்கள் என்பதையும் மீறி ஆத்மதிருப்திக்கு இதுபோன்ற விஷயங்கள் ரொம்பவும் தேவைப்படுகிறது.

எதிர் நீச்சல்

உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

Sunday, February 22, 2009

Oscar goes to......

02/22/09, 1.20PM:
Picture Courtesy: Cartoonist Mike Mikula
உலகமே எதிர்பார்க்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளன. முன்பு எப்பொழுதையும் விட இந்த முறை இந்தியர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நாம் அதிகம் எதிர்பார்க்கும் Slumdog Millionaire பட குழுவினருக்கும் குறிப்பாக A.R.Rahmanக்கு விருது பெற வாழ்த்துக்கள்.

Update: 02/22/09, 9.00PM:
Picture Courtesy: NDTV
8 விருதுகளை தட்டிச்சென்ற Slumdog Millionaire பட குழுவினர்க்கும், உலகஅரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடிதந்த 'Madras Mozart' A.R.Rahmanக்கும், 'Sound Wizard' Resul Pookuttyக்கும் வாழ்த்துக்கள்.

Sunday, February 15, 2009

மடகாஸ்கர் | சுல்தான் தி வாரியர்

இது ஒரு அனிமேட்டட் மூவி, மருந்துக்கு கூட மனிதர்களின் வாசம் படத்தில் கிடையாது. நியூயார்கில் உள்ள சென்ட்ரல் பார்க் ஜூவில் படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே எவ்வளவு நுணுக்கமாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிடுகிறது. ஒரு ஐம்பத்து பேரை ஒரு காட்சியில் காண்பிக்கிறார்கள் என்றால், அனைவருடைய உடல் அசைவுகள், காற்றில் அசையும் அவர்களுடைய ஆடை வரை அனைத்தையும் துல்லியமாக அனிமேஷன் மூலம் சாத்தியப்படுதியிருக்கிறார்கள். படத்தில் Marty என்கி்ற வரிகுதிரையும் Alex என்கி்ற சிங்கமும் உங்கள் மனதை கொள்ளை கொள்வது உறுதி. Marty காட்டு வாழ்க்கை விரும்பி ஜூவில் இருந்து தப்பித்து செல்ல, அதனுடைய உற்ற நண்பனான Alex, Melman (ஓட்டகசிவுங்கி), மற்றும் Gloria (காண்டாமிருகம்) அதனை தேடி ஜூவில் இருந்து தப்பிக்கும். இந்த மூன்று மிருகமும் ரயில்வே ஸ்டேஷனில் Marty சந்திக்க, அங்கிருக்கும் மக்கள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடுவதும், இந்த மிருகங்களை போலீஸ் துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பதும், பின்னனி இசையும் சேர்ந்து அணிமேட்டது படம் பார்க்கிறோம் என்கின்ற உணர்வையே மறக்கடிக்கிறது.

கேமராவில் காட்டை படம்பிடிப்பது எவ்வளவு சிரமமோ அதைவிட சிரமம் அனிமேஷனில் படம்பிடிப்பது. இந்த படத்தில் அனிமேஷன் மூலம் ஒரு அடர்ந்த காட்டையே உருவாக்கியிருக்கிறார்கள். செடி, கொடி, மரம், புல், பூச்சி என்று எதையும் விட்டுவைக்கவில்லை. சாப்பிட அசைவம் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்படும் சிங்கம் ஒரு கட்டத்தில் உணர்வை அடக்கமுடியாமல் தன் நண்பனான வரிகுதிரையிம் மீதே பாய்வதும் பின்னர் வருந்தி தன்னைத்தானே சிறைவைத்துகொள்வதும் அருமையான செண்டிமெண்ட். கிளைமாக்ஸ் இல் படையெடுத்து வரும் நரிகளிடம் இருந்து தன் நண்பர்களை காப்பாற்ற சிங்கம் சண்டைபோடுவது காமெடி கலந்த action காட்சி.

குழந்தைகளுக்காக எடுக்கக்கூடிய இது போன்ற படங்கள் நம்மை போன்ற பெரியவர்களுக்கும் பிடித்திருப்பது இயக்குனருடைய திறமையாக இருந்தாலும், self evaluate செய்து பார்த்தல் மிகப்பெரிய மரங்களுக்கு கீழே முளைத்திருக்கும் மெல்லிய சின்ன சின்ன காளான்களை போல் நமக்குள் இன்னும் அந்த பிள்ளை மனசு துளிர்விட்டபடி இருப்பது புரியும்.

சுல்தான் தி வாரியர் - கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள படம், பல கோடிகள் முதலிடு, ஒரு அனிமேட்டட் படத்திற்கு இவ்வளவு செலவு செய்கிறார்களே படம் ஓடுமா என்று அவ்வப்போது தோன்றும். Madagascar பார்த்தபின்பு, சற்றே அனலிஸ் செய்து படத்தை எடுத்து, நல்ல முறையில் மார்க்கெட்டிங் (குசேலன் போல் இல்லாமல்) செய்தால் நிச்சயம் வெற்றி பெரும் என்று தோன்றுகிறது. அனிமேட்டட் படம் என்பதால், இரண்டரை மணி நேரம், 5 பாடல், 4 சண்டை காட்சி போன்ற சராசரி ரஜினி பட பார்முலா இதற்கு பொருந்தாது. சற்றே அதிலிருந்து வெளியில் வந்து 1.45 மணி நேர படமாக, விறுவிறுப்பு குறையாமல் நிறைய presence of mindஉடன் கூடிய காமெடி கலந்து எடுத்தால் செஞ்சுரி அடிப்படுது உறுதி. மேலும் தமிழ் சினிமாவிற்கு ஒரு புது ரூட்ஐ காட்டிய பெருமையையும் தட்டிசெல்லலாம். நிறைய அனிமேஷன் படமும் வருவதற்கு வாய்ப்பு ஏற்ப்படும். ரஜினி என்ற பெயர் இருந்தால் போதும் படம் ஓடிவிடும் என்ற நினைப்புடன் படம் எடுதுக்கொண்டிருந்தால், தயாரிப்பாளர் அடிக்கடி குசேலனை நினைத்துக் கொள்வது நலம்.

Saturday, February 14, 2009

பொய்கால் குதிரை

லாஜிக் இல்லா மேஜிக் என்ற வார்த்தை எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த படத்திற்கு கரெக்ட்டா பொருந்தும். எந்த லாஜிக்கும் இல்லாமல் சிரிப்பு ஒன்றையே மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். மெய்மறந்து ஒரு இரண்டரை மணி நேரம் நாம் சிரிப்பதுவே இயக்குனர் சிகரம் + கிரேசி கூட்டணியின் வெற்றி. கிரேசி மோகன் எழுதிய A Marriage Made In Saloon நாடகத்தை அப்படியே படமாக எடுத்திருக்கிறார் கே.பி. திரைக்குமுன்னே கவிஞர் வாலியையும், கதாநாயகனாக ராமகிருஷ்ணாவையும், நகைச்சுவை நடிகராக சார்லியையும் இப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.

படத்தின் ஜீவநாடியே 'பந்தய' சம்பந்தமாக வரும் வாலிதான். எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி சும்மா பூந்து விளையாடுகிறார். பந்தயம் என்றால் சாதரணமான பந்தயம் அல்ல, ஆந்திராவில் என்.டி.ஆர் ஜெயிப்பாரா தோப்பாரா? அந்த பொண்ணு வடநாடா தென்னாடா போன்ற ரசிக்கும்படியான பந்தயங்கள். அதிலும் அந்தகால சினிமா,அரசியல் தெரிந்தவர்கள் சற்று அதிகமாகவே பந்தயத்தையும் வசனத்தையும் ரசிக்கலாம். அந்த அளவுக்கு நிகழ்காலத்தோடு ஒட்டிப்போகும் வசனங்கள். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக கதாநாயகனே இவரை பந்தயத்திற்கு இழுக்க சும்மா சூடு பிடிக்கிறது படம். பந்தயத்தில் ஜெயிப்பதற்காக இவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் கதையே.

வசனம் கிரேசி மோகன், தன்னுடைய இயல்பான நகைச்சுவையை இழக்காமல் அதேசமயம் கே.பி விரும்பும் எதார்த்தத்துடன் எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு ஒன்று, ஹீரோ தன் அப்பாவிடம் நீங்கள் ஊருக்கு போயிட்டு திரும்பிவரதுகுள்ள ஒரு பெண்ணை காதலித்து காட்டுகிறேன் என்று சொல்லுவர், அதற்க்கு அவுங்க அப்பா "பரிட்சையிலதான் கஜினி ஸ்டைல்ல படைஎடுக்குற, அட்லீஸ்ட் காதல்லயாவது ரஜினி ஸ்டைல்ல சுருசுருப்பா இரு" என்பார். அதேபோல் கல்லூரியில் காதல் என்பதை ஒரு பாடமாக வைத்ததற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவிக்க, சக மாணவன் ஒருவன் எழுந்து "கமலஹாசன் கல்வி மந்திரியா வந்து சிலபஸ்ச எல்லாம் மாத்தினப்போ என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா" என்பர். இந்த இரண்டு வசனத்தையும் அடுத்து அடுத்து கேட்கும்போது ரஜினி, கமல் என்ற இரண்டு மிகப்பெரிய நடிகர்கள் தங்களை எப்படி ஆரம்ப காலத்தில் நிலைநிருதிகொன்டார்கள் என்பது புரிகிறது. ரஜினி ஸ்டைல், கமல் ரொமான்ஸ்.

நாயகியாக 'வத்தலகுண்டு' விஜி. நான் ஒரு ஊனமுற்றவரைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று மேடையில் சபதம் எடுத்துக்கொள்ளும் போதும் சரி, கிளைமாக்ஸ்ல், கொள்கையை தூக்கி குப்பையில போடுங்க என்று சொல்லும்போதும் சரி க்யூட்.....க்யூட்....க்யூட். கிளைமாக்ஸ்ல் விஜி, வாலியை பார்த்து, இவருக்கு பந்தயம் வைக்கிறத தவற வேற என்ன தெரியும் என்று கேட்க "பந்தயம் வச்சா என்னம்மா தப்பு, ராமாயணத்துல இல்லையா, வில்ல உடைக்கிறவுங்களுக்குதான் என் பொண்ணு ஜானாகிய கொடுப்பேன்னு ஜனகர் பெட்டு வைக்கலையா, சம்பந்தம் வச்சா பெட்டு, ஜனகர் வச்சா சுயம்வரமா?" என்று எதிர்வாதம் செய்யும் இடம் யதார்த்தத்தை மீறி ரசிக்கவைக்கும் இடம். நாயகன் ராமகிருஷ்ணா நல்ல எதார்த்தமான நடிப்பு ப்ளஸ் புதுமுகத்திற்கு உண்டான லேசான வெட்கம இரண்டும் கலந்து அருமையாக கேரக்டரோடு பொருந்திப் போகிறார் அல்லது பொருத்தி இருக்கிறார் கே.பி. முடி திருத்தும் இடத்தில் வாலி, ராமகிருஷ்ணா, ரவீந்தர், கமல் ஆகிய நான்கு பேருக்கு இடையில் காதல் பற்றி நடக்கும் விவாதம் எத்தனை முறை ஒன்ஸ் மோர் கேட்டாலும் தகும். ஸ்டாக்(Stock) கேரக்டர்கள் அமைப்பதில் தான் நம்பர் ஒன் என்பதை அப்போதே நிருபித்து இருக்கிறார் கே.பி. மூன்று முடிச்சு படத்தில் மனச்சாட்சி, பொய் படத்தில் விதி போல் இதில் புகைப்படமாய் இருக்கும் கமல். கமலுக்கும் முடி திருத்துபவரான ரவீந்தருக்கும் இடையில் ஒரு கற்பனை உலகத்தை படைத்தது இருவரும் பேசிக்கொளும் படி அமைத்திருப்பது இன்றும் புதுமையே.

ஒரு தலைமுறையின் புத்திசாலித்தனம் அடுத்த தலைமுறையினருக்கு காமன்சென்ஸ் என்று சொல்லுவார்கள். பல தலைமுறைகள் தாண்டி இப்போதும் கூட இந்த கதையும் திரைக்கதையும் பார்த்தல் புத்திசாலிதனமாகவே தெரிகிறது.