பக்தி பாடல்களை படிக்கும் போது நம் மனம் இளக வேண்டும், சாமி இறங்கி வந்து அருள் தர வேண்டும். இது நடந்தால் மட்டும் தான் அது சாமி பாட்டு. இன்றைக்கு இணையத்தில் உள்ள பல பக்திபாடல்கள் இதற்க்கு விதிவிலக்கானவை, இரைச்சலான இசையும் கொண்டவை. ஆனால் இந்த பாட்டு கிருஷ்ண கவசத்திற்கு இணையான, வளமான வார்த்தைகள் கொண்டவை. செட்டிநாட்டு பகுதிகளில் இந்த பாடல் மிகவும் பிரபலம் ஆனால் அந்த பகுதியையும் தாண்டி இந்த பாடல் பெற வேண்டிய புகழை பெறவில்லை என்பது என் வருத்தம். பத்து பதிகங்கள் கொண்ட இந்த பாடலை படிக்கும் போது ஒரு நம்பிக்கையும் தெளிவும் பிறக்கும். ரசனையும் நம்பிக்கையும் இருப்பவர்கள் இந்த பதிவை மேலும் படிக்கலாம்.
பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்
வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்
நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீ எது கொடுத்தாய்
நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்
நுழைவதற்கு ஏன் விடுத்தாய்
வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியேவளம் காண வைக்கும் உமையே.
தாவென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்தாய் என்று சொல்லிவைத்தார்தலைமகள்உன் சந்நிதியில் கலைமகளின் அருளாலேதமிழ்பாடி வரங்கள் பெற்றார்சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்செவிமூடி நிற்கலாமோ?சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்தேவியவள் நீயல்லவோஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்அணுகவிடல் முறையாகுமோ?அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்அனுதினமும் வாடலாமோ?வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்துமகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மாவைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியேவளம் காண வைக்கும் உமையே.
***
தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியில் புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப்பூ மாது போற்றிமங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகிழ்ந்தளிக்கும் அரசிபோற்றி
மாதரசி உண்ணாமலை அழகுசிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி
பொங்கிவரும் துயரத்தைப் பொடியாக்க ஓடிவரும்
அன்னபூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றிமங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர
மாதரசி கூட்டி வருவாய் – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே!
மலைபோன்ற செல்வத்தை குவித்துவைத்திருந்து நான்
மற்றவர்க்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்.
கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான்
கௌரவம் பெறவும் வேண்டும்.
கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம்
காட்சி தந்து அருளவேண்டும்.
நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்.
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர் வழிகள் காட்டவேண்டும்
வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே
சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச்
சேவித்து மகிழ்ந்திருப்பேன்!
தெரியாமல் செய்தபிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடிவந் தழுதிருப்பேன்!
புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்திருந்தேன்!
பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப்
புரியாமல் வாழ்ந்திருந்தேன்!
திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்து நான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்!
தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி
சிங்காரப் பாட்டிசைத்தேன்!
பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீ காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே!
சில நேரங்களில், வாழ்வில் பயம் சூழ்ந்த காலங்கள் வரும், கடவுளும் ஆலயமும் மட்டுமே நம்பிக்கை தரும் இடமாக இருக்கும். மனம் உருகி நம்மை நாமே கடவுளிடம் ஒப்படைக்கும் தருணங்கள் கூட நடப்பதுண்டு. இருப்பது போதும் என்னும் எண்ணம் வரும் போது, இப்படியே மீதி காலம் இருந்தால் போதும் என்பதுவே நம் வேண்டுதலாக இருக்கும். சில பல உவமைகளோடு அழகாக வரும் பதிகம் இது, என்னை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு, உன் கடமை என்று நிறைவு செய்து இருப்பார்.
திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில்
தினந்தோறும் சோறு உண்டு!
திருநாளாம் பொங்கலில் நந்தியெனும் காளைக்கும்
தித்திக்கும் பொங்கல் உண்டு!
வருஷத்தில் ஒருநாளில் வடையோடு அன்னத்தை
வைரவரும் காண்ப துண்டு!
வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும்
வார்க்கின்ற பாலு முண்டு!
அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உனையெண்ணும்
அடியேனுக் கென்ன உண்டு!
அன்று தினம் அளந்தபடி என்றைக்கும் நடந்திடவே
அருள்புரிய வேண்டும் அம்மா!மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும்
மறந்திடல் முறையாகுமோ - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே!
வளம் காண வைக்கும் உமையே!
கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்
கழுத்திலே பொதியிருக்கும்!
காளை மாடாகவே பிறந்திடின் நிச்சயம்
கழனியில் கால் இருக்கும்!
பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ
பகலிரவு விழிக்க வேண்டும்!
பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்
பதியங்கள் போட வேண்டும்!
அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையன்றி
யாரெனக் குதவுவார்கள்?
ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னை நீ
அகிலத்தில் படைத்த பின்னால்வழிகாட்ட மறுப்பதும் நியாயமா? என் விழியில்
வடிந்து நீர் ஓடலாமா? - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே.
***
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ
புலம்பியே தீர வேண்டும்!
பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்தநான்
புதுயுகம் காண வேண்டும்!
கல்லாக நிற்கின்ற தெய்வம்நீ இல்லையெனக்
காட்டிட விரைந்து வருக
கனதனம் நீதந்து காசினியில் புகழ்தந்து
காவலாய் நின்று அருள்க!
முள்ளாக மலராக மோதிடும் வாழ்க்கையில்
முற்றும் நான் நம்பி வந்தே!
மோதகப் பிரியனின் தாயான உன்னிடம்
முறையீடு செய்கின்றேன்!பல்லக்கு பரிவாரம் பார்த்திடும் ராஜாங்க
பவனியை எனக்கு அருள்க - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே!
எவருக்கு எதுவேண்டும் என்பதை அறிந்தநீ
ஏறிட்டுப் பார்க்கவில்லை!
இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும்நான்
எதுகேட்டும் மாறவில்லை!
சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர்
செந்தமிழ் கவிதை மூலம்!
சீர்கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டுநீ
சிரமத்தை அகற்றவேண்டும்!
கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனைநம்பி
காலங்கள் போக்கிவிட்டேன்!
காப்பாற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது
காசினியில் யார்பொறுப்பு?மகன்கேட்டு தாய்எதுவும் மறுப்பதில் முறையில்லை
மனமிரங்கி வந்து அருள்க! - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே.
இந்த வளமான தமிழையும் 'கவிஞர்' என்ற வார்த்தையையும் உங்களுக்கு கவியரசர் கண்ணதாசனை நினைவு படுத்தியிருக்கும் என்பது எனக்கு தெரியும். நல்ல தமிழ் எப்போதும் நல்லனவற்றை நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கும், அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல, அவர் பிறந்த பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவர். உங்களுக்கும் நாளிதழ்கள் மூலம் பரிச்சயமானவர் தான், புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், தினத்தந்தி புகழ் என்கலை வித்தகர் 'சிவல்புரி' சிங்காரம் தான் அவர். நீங்களும் படியுங்கள் பயன்பெறுங்கள், படிக்கப் படிக்க வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகியை பார்க்க வேண்டும் என்ற ஆசை வரும், போய் பாருங்கள் வளமோடு வாழுங்கள். நன்றி.
No comments:
Post a Comment